அம்பேவெல பகுதியில் ஓடும் தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்றபோது கீழே விழுந்ததில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
இன்றையதினம்(19) ஞாயிற்றுக்கிழமை காலை நானு ஓயாவிலிருந்து பதுளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்திலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தொடருந்தில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த அவர், உடனடியாக சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், மலையக தொடருந்து பாதையில் பயணிக்கும் பயணிகள், குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ஓடும் தொடருந்துகளில் இருந்து வெளியே குனிவதையோ அல்லது ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதையோ தவிர்க்குமாறு அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் கடுமையான காயங்களுக்கு அல்லது உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினரும் தொடருந்து திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

