அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும், இதனால் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேகாலையின் தெடிகம பகுதியில் நேற்று (18) சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் வழங்குபவர்கள் விசாரணைகளின்போது அச்சுறுத்தப்பட்டு, மனரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விமர்சகர்களை ஒடுக்கும் வழிமுறை
தற்கொலைகள் அதிகளவில் நிகழும் ஒரு காலகட்டமாக இது தனக்குத் தோன்றுவதாகவும், அரசாங்கத்திற்கு எதிராகப் பேசிய சிலர் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அதேவேளை, விசாரணையின்போது இன்னும் சிலரிடம் அவர்களும் தற்கொலை செய்துகொள்ள நேரிடலாம் என அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளதுடன், அரசாங்கம் தனது விமர்சகர்களை ஒடுக்குவதற்கும் அச்சுறுத்துவதற்கும் இத்தகைய வழிமுறைகளைப் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், இந்த உரையின்போது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள், வரிவிதிப்பு முறைகள், அரசு ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்களை நடத்தும் விதம் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்த அவர், பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

