மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (22) காலை 10 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இராணுவ வீரர் மன்னார் சௌத்பார் இராணுவ முகாமில் கடமையாற்றிய 46 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை
குறித்த இராணுவ வீரர் மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்ததோடு, அங்கு கடமையில் உள்ள இராணுவ வீரர்களுக்கு பொறுப்பாக இருந்து, பணி நிமித்தம் துப்பாக்கிகளை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிகளை பரிசோதித்து வழங்க முற்பட்டபோதே துப்பாக்கியொன்று வெடித்ததன் காரணமாக அந்த இராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.
இந்த நிலையில் இராணுவ வீரரை உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

