சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்பாக வெளியான தவறான கருத்துக்களை அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“Hold SLC Elections or Get Blacklisted, ICC Informs President AKD” என்ற தலைப்பில் நாளிதழ் ஒன்றின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள உண்மைக்குப் புறம்பான மற்றும் தவறாக வழிகாட்டும் செய்தியை அரசாங்கம் வன்மையாக நிராகரித்துள்ளது.
இந்த அறிக்கைக்கு எவ்வித உண்மைப் பின்னணியும் இல்லை என்பதுடன், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் ஜெய் ஷா (Jay Shah) அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பை வேண்டுமென்றே திரிபுபடுத்திக் காட்டுவதாகும் என குறித்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் உள்ளடக்கம்
“இந்தக் கலந்துரையாடலில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றம், கீழ்மட்டத்திலும் மற்றும் இளைஞர்களுக்கான கிரிக்கெட் வேலைத்திட்டங்கள், மேலும், இளம் விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியன குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி மற்றும் ICC தலைவர் ஆகிய இருவரும் தமது X தளத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது எவ்வித இறுதி அறிவித்தலோ, கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அச்சுறுத்தலோ அல்லது தேர்தல் தொடர்பான விடயங்களோ கலந்துரையாடப்படவில்லை என்பதுடன், அவ்வாறான எந்தவொரு இறுதி அறிவித்தலும் விடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ICC தலைவர் ஆகிய இருவரினதும் உத்தியோகபூர்வ அறிக்கைகளை வாசகர்கள் நேரடியாகப் பார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கும்போது, இவ்வாறான புனையப்பட்ட செய்தியை வெளியிடுவது சம்பந்தப்பட்ட நாளிதழின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க வழிவகுக்கும்.
உண்மைக்குப் புறம்பான செய்தி தொடர்பான இந்த அறிவித்தலை பகிரங்கமாக வெளியிடுமாறும், சம்பந்தப்பட்ட செய்தியை அச்சு மற்றும் இணையப் பதிப்புகள் ஆகிய இரண்டிலிருந்தும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கம் டெய்லி மிரர் நாளிதழிடம் கேட்டுக்கொள்கிறது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை கிரிக்கெட் (SLC) தேர்தல்களை ஜூலை 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிடப்பட்ட கால எல்லைக்குள் தேர்தலை நடத்த தவறினால் இலங்கை கிரிக்கட் சபை மீண்டும் ICC-இன் கறுப்பு பட்டியலில் உள்வாங்கப்படும் என கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நாட்டுக்கு வருகைத்தந்திருந்த ICC தலைவர், ர் ஜெய் ஷாவிற்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையே இது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அரசியல் மயமாக்கும் செயற்பாடு
இதன்போதே மேற்கண்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் இலங்கை கிரிக்கட்டை அரசியல் மயமாக்குவது குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக இலங்கை கிரிக்கெட்டுக்குள் 2023ஆம் ஆண்டளவில் அரசியல் தலையீடு கொண்டுவரப்பட்ட நிலையில் அதன் உறுப்புரிமையை இடைநீக்கும் நடவடிக்கையில் ஐ.சி.சி ஈடுபட்டது.
இவ்வாறான நிலையில் கிரிக்கெட் சபை நிர்வாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், இலங்கை இது போன்ற தடையை மீண்டும் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரன் விக்ரமரத்ன
இந்த கோரிக்கை குறித்து ஜெய் ஷா, இலங்கை கிரிக்கெட்டின் பங்குதாரர்கள், மற்றுத் நிர்வாக குழுவிடமும் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரன் விக்ரமரத்னவின் தலைமையில் இலங்கை கிரிக்கெட்டின் விவகாரங்களைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட புதிய இடைக்காலக் குழுவின் மீதும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா உட்பட இலங்கை கிரிக்கெட்டின் செயற்குழு பதவி விலகியதை தொடர்ந்து, விளையாட்டு அமைச்சு அதன் நிர்வாகத்தை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டதுடன், கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் புதிய அரசியலமைப்பை வரைவதற்கும் இந்த புதிய இடைக்காலக் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

