இஸ்ரேலும் ஈரானும் திங்களன்று (23) ‘முழுமையான போர்நிறுத்த’ ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேறிய 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.
எனினும், அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுக்களை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளதுடன் போர்நிறுத்தம் குறித்த எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.
போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில்,
அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே முழுமையான போர்நிறுத்தம் ஏற்படும் என்று முழுமையாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது – என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுப்படி, ஈரான் முதல் கட்ட நடவடிக்கையாக போர்நிறுத்தத்தில் ஈடுபடும். தொடர்ந்து இஸ்ரேலும் 12-வது மணிநேரத்தில் போர்நிறுத்தம் மேற்கொள்ளும். அடுத்த 24 மணிநேரத்தில், முற்றிலும் போரானது நிறுத்தப்படும்.
12 நாள் போரானது அதிகாரப்பூர்வ முறையில் உலகம் வணங்கும் வகையிலான ஒரு முடிவுக்கு வரும்.
இந்த போர்நிறுத்த காலகட்டத்தில், இரு நாடுகளும் அமைதியாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இரு தரப்பினரும் புதிய தாக்குதல்களை அச்சுறுத்திய சில நிமிடங்களுக்குப் பின்னர் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய பின்னர் இது வருகிறது.