இந்தியா புனேவில் மலையேற்றத்தின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட இளம் தொழிலதிபர், அவரது வருங்கால மனைவியால் காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடிக்கணக்கில் செலவு செய்து, ராஜஸ்தான் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருந்த திருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வருங்கால மனைவியுடன் மலையேற சென்ற இளைஞன்
புனேவைச் சேர்ந்த 26 வயதான கேத்தன் அகர்வால், தனது குடும்பத்தின் ‘சக்ஸஸ் குரூப்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வந்தார்.
இவருக்கும் சியா கோயல் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி, கேத்தன் அகர்வால் தனது வருங்கால மனைவி சியா கோயலுடன் புனே அருகே உள்ள லோகாகாட் கோட்டைக்கு மலையேற்றம் செய்துள்ளனர்
அப்போது, பள்ளத்தாக்கின் விளிம்பில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது கேத்தன் கால் தவறி கீழே விழுந்துவிட்டதாக சியா கோயல் ஆரம்பத்தில் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இது ஒரு சோகமான விபத்து என்றே அனைவரும் நம்பியிருந்தனர்.
பள்ளத்தாக்கில் தள்ளி கொலை
ஆனால், காவல்துறையினரின் தீவிர விசாரணையில், இது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது. சியா கோயலும், அவரது காதலனான சேத்தன் சௌத்ரியும் சேர்ந்து கேத்தனை வேண்டுமென்றே பள்ளத்தாக்கில் தள்ளி கொலை செய்ததை போலீசார் கண்டறிந்தனர்
இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை சியா கோயல் மற்றும் சேத்தன் சௌத்ரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கேத்தன் மற்றும் சியாவின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக ராஜஸ்தானில் உள்ள ஒரு அரண்மனையை ரூ.17 கோடிக்கு முன்பதிவு செய்திருந்ததாகவும், கூறப்படுகின்றது. அத்துடன் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை அழைத்து வர இரண்டு தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந் நிலையில் திருமண ஏற்பாடுகளுக்கு மத்தியில் வருங்கால மனைவியின் இந்த சதிச்செயல், இருவரின் குடும்பத்தினர் மத்தியிலும், புனே வர்த்தக வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

