சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், இதுவரை இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன் வசதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வு குறித்து விளக்கமளிக்கும் போதே மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விசேட வரைவு உரிமைகள் (Special Drawing Rights) அடிப்படையிலான நிதி வசதிக்கான உடனடி அணுகல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வை, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை நேற்று (27) நிறைவு செய்தது.
அதன்படி, இந்த கடன் திட்டத்தின் கீழ் இலங்கை வலுவான செயல்திறனைக் கொண்டுள்ளதாக அந்த நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் மற்றும் செலவுகளை ஈடுசெய்யும் வகையிலான மின்சாரக் கட்டண முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளது.
இருப்பினும், புதிய வெளிநாட்டுச் செலுத்துச் சமநிலை நெருக்கடிகள் ஏற்படுவதைத் தவிர்த்தல் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்காமை அல்லது தீவிரப்படுத்தாமை தொடர்பான தொடர்ச்சியான செயல்திறன் அளவுகோல்களை இலங்கை பூர்த்தி செய்யவில்லை என்பதை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

