கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலை வழியாக கடுவெல – மாத்தறை இடையே இயக்கப்படும் சொகுசுப் பேருந்திற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்தினால் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
சாதாரண சேவை பேருந்துகள் இரண்டும் தீயினால் சேதம்
அத்துடன், குறித்த பேருந்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல – கொள்ளுப்பிட்டி சாதாரண சேவை பேருந்துகள் இரண்டும் தீயினால் லேசான சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்திற்கு தீ வைப்பதைக் கண்டு, அருகில் இருந்த மற்றொரு பேருந்திலிருந்த ஓட்டுநரும் நடத்துனரும் கூச்சலிட்டுள்ளனர்.
இதன்போதே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தீ வைக்கப்பட்ட பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மற்றைய பேருந்திலிருந்த சகாக்களின் கூச்சலைக் கேட்டு அவர்கள் பேருந்திலிருந்து வெளியே குதித்து உயிர்தப்பியுள்ளனர்.
தனிப்பட்ட பகை காரணமாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறியுள்ள கடுவெல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

