முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரிக்குக் கிடைத்த வாய்ப்பிற்குப் பதிலாக, யோஷித ராஜபக்ச பயிற்சிக்காக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட விதம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படை அதிகாரிக்கான வாய்ப்பு
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சிலவேளை இது மீண்டும் நிகழலாம். யோஷித ராஜபக்ச இலஞ்ச ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்.
அவர் பயிற்சி பெறுவதற்காக இங்கிலாந்து சென்ற விதம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. அனுராதபுரத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரிக்கு வாய்ப்பு கிடைத்திருந்த போது, யோஷித ராஜபக்ச மகிந்த ராஜபக்சவின் மகன் என்ற காரணத்தினால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை விமல் வீரவன்சவும் கம்மன்பிலவும் இதனைக் கூட ஒரு போர் வீர வேட்டை என்று அழைக்கலாம். ஆனால், இந்த நடவடிக்கை ஒரு போர் வீரனை வேட்டையாடுவதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

