வனவிலங்குகளின் உடல் பாகங்களைப் பயன்படுத்தி ஆபரணங்களைத் தயாரித்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்து வந்த தங்க நகைக் கடை உரிமையாளர் ஒருவருக்கு 21 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொல்கஸ்ஓவிட்ட, கஹதுடுவ பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கே நேற்று (08) ருவான்வெல்ல நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அவரது தங்க நகைக் கடையில் விலங்குகளின் முடிகள் மற்றும் உடல் பாகங்களைப் பயன்படுத்தி தாயத்துக்கள், மோதிரங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வந்தபோது, புலத்கொஹுபிட்டிய வனவிலங்கு அதிகாரிகளும் குருணாகல் வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகளும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டிருந்தனர்.
இந்தச் சோதனை கடந்த ஜூன் 24ஆம் திகதி நடத்தப்பட்டதுடன், வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ருவான்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், மீண்டும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தார்.
சந்தேக நபர் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீறி, வனவிலங்குகளின் உடல் பாகங்களை இவ்வாறு மோதிரங்கள் மற்றும் மாலைகள் உள்ளிட்டவற்றுக்காகப் பயன்படுத்தியுள்ளார் என்று வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கருப்பு பவளம், புலிப் பற்கள், யானை முடிகள், யானைத் தந்தங்கள், விசேட கடல் சிப்பிகள், யானை தொடைகள் போன்றவற்றை மாலைகள், மோதிரங்கள் எனத் தயாரித்து, “இவற்றை அணிந்தால் கிரக தோஷங்கள் நீங்கும்” என்று கூறி ஏமாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதவான் அவருக்கு 21 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
குறித்த அபராதத் தொகையை மூன்று தவணைகளில் செலுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், அதன் முதல் தவணையான 7 இலட்சம் ரூபாயை ஓகஸ்ட் 8ஆம் திகதிக்குள் செலுத்தி முடிக்குமாறும் அறிவித்துள்ளார்

