அடுத்த ஆண்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ பேருந்து சேவை முன்னெடுக்க உள்ளதாக முக்கிய அறிவிப்பை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் பொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நகரங்களில் அடுத்த ஆண்டு முதல் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2035 இல் இலங்கையின் முழு நகரிலும் மெட்ரோ பேருந்துகள்
இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று கருத்துத் தெரிவித்தார்.
இதற்கமைய, கொழும்பு நகரை மையமாகக் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் 122 பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.
ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைவாக, இந்த ஆண்டிற்குள் மேலும் 50 பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 2027ஆம் ஆண்டின் இறுதியளவில் இந்த மொத்தப் பேருந்துகளின் எண்ணிக்கை 172 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அடுத்த ஆண்டில் மேலும் 100 பேருந்துகளைச் சேவையில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் நகர்ப்புற போக்குவரத்தை முழுமையாகத் தாழ் தளப் பேருந்துகள் எனப்படும் ‘மெட்ரோ பேருந்துகள்’ மூலம் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கையாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், 2029ஆம் ஆண்டளவில் தாழ் தளப் பேருந்துகளின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் போக்குவரத்துத் துறை கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காகத் தனியார் துறை, மாநகரசபைகள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் (Pension Funds) ஆகியவற்றையும் இத்துறையில் முதலீடு செய்து பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வருகின்ற 2032 அல்லது 2035ஆம் ஆண்டளவில் இலங்கையின் முழுமையான நகரப் போக்குவரத்துச் சேவையையும் மெட்ரோ பேருந்துகள் மூலமாகவே முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

