இலங்கைப் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 5ஆவது இடத்தில் உள்ள கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அதற்கான சிகிச்சை சேவைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும் 12 அதிநவீன கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வைத்தியசாலைக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, அடுத்த மாதத்திற்குள் மேலும் 06 இயந்திரங்களை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த இயந்திரம் ஒன்றின் பெறுமதி 60 இலட்சம் ரூபாவாகும் என்பதுடன், இதற்காக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் 72 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.
அநுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், குருநாகல், டி சொய்சா மகளிர் வைத்தியசாலை, கண்டி, கம்பஹா, மாத்தறை, மொனராகலை, புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் பிரதான வைத்தியசாலைகளில் தற்போது இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அதேநேரம், அடுத்த மாதத்திற்குள் கிடைக்கப்பெறவுள்ள எஞ்சிய 06 இயந்திரங்களை அம்பாறை, ராகம, களுத்துறை, குளியாப்பிட்டிய, மாத்தளை மற்றும் வவுனியா ஆகிய போதனா மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் நிறுவுவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதுடன், இதற்காக 42 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து இயந்திரங்களும் நிறுவப்பட்ட பின்னர், அரச வைத்தியசாலைக் கட்டமைப்பில் உள்ள மொத்த கோல்போஸ்கோபி இயந்திரங்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வடையும். இதன் மூலம் நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் நோயாளர்களுக்கான சிகிச்சைச் சேவைகளை வழங்குவதே அமைச்சின் முதன்மை நோக்கமாகும்.
கோல்போஸ்கோபி என்பது கர்ப்பப்பை வாய் மற்றும் யோனிப் பகுதியில் உள்ள அசாதாரண நிலைமைகளைப் பரிசோதிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ முறையாகும். ‘கோல்போஸ்கோப்’ எனப்படும் இந்த விசேட உருப்பெருக்கக் கருவியானது கர்ப்பப்பை வாய்த் திசுக்களின் விரிவான பார்வையை வழங்குவதுடன், அசாதாரண செல்கள் அல்லது புண்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க வைத்தியவர்களுக்கு உதவுகிறது.
பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்று விசேட வைத்தியர்கள் மற்றும் பெண்ணோயியல் புற்றுநோய் விசேட வைத்தியர்களால் பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட அசாதாரண நிலைமைகளைக் கண்டறிவதற்காக இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் கொடிய நோயை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் முழுமையாகத் தடுக்க முடியும் என்றும், இது மனித பாப்பிலோமா வைரஸ் மூலம் பரவும் ஒரு நோய் என்றும் தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 1,200 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், முறையான சிகிச்சை கிடைக்காமை காரணமாக வருடத்திற்குச் சுமார் 180 நோயாளர்கள் உயிரிழக்கின்றனர் என தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

