உதாகம பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் சடலத்தை தோண்டி அதன் தலையை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக கூறப்படும் மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், 18, 19 மற்றும் 20 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உதாகம மற்றும் மஹவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் மஹவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலையை கேட்ட ஆசிரியர்
மெனிக்கின்ன பிரதேசத்தில் நபரொருவரின் தேவைக்காக ஆசிரியர் ஒருவர் தலையைக் கேட்டதாகவும் அதன் பிரகாரம் தலையை தோண்டி எடுத்ததாகவும் சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
105 வயது மூதாட்டியின் தலையே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டிருந்தது. சந்தேக நபர்கள் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட தலையுடன் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அந்த புகைப்படங்களின் அடிப்படையில் குடியிருப்பாளர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இறந்த பெண்ணின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்களை விசாரித்த பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.