60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வர முற்பட்ட மூன்று வெளிநாட்டு விமானப் பயணிகள் இன்று (25) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 31, 36 மற்றும் 40 வயதுடைய சீனப் பிரஜைகள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இந்த சிகரெட்டுக்களை விமான நிலைய பசுமை வழி ஊடாக கடத்திச் செல்ல முயன்றபோதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க அதிகாரிகளின் அவதானத்தைத் திசைதிருப்புவதற்காக, சந்தேகநபர்கள் இந்த சிகரெட் தொகையை சீனாவில் இருந்து கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குக் கொண்டு சென்று, அங்கிருந்தே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த 6 பயணப் பொதிகளுக்குள் 40,000 சிகரெட்டுகளைக் கொண்ட 202 சிகரெட் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையின் பெறுமதி சுமார் 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தற்போது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

