உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, சுரேஷ் சாலே உள்ளிட்ட சந்தேக நபர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றங்களை மே மாதம் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் பிரிவிற்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் சுரேஷ் சாலேவை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நேற்றுடன் 07 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் தாக்குதல்களின் பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் பிள்ளையான் ஆகியோரிடம் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், சுரேஷ் சலே இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
சனல்-4இற்கு அசாத் மௌலானா கொடுத்த அறிக்கையின் படி, தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சுரேஷ் சலே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக இன்று பல விடங்கள் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வு வழக்கில், சுரேஷ் சல்லேவை மூன்றாவது சந்தேக நபராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெயரிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

