கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று (12) ஊடகங்களிடம் பேசிய உறவினர்கள், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் அவரது உயிருக்கு கணிசமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சுரேஷ் சலே தொடர்பாக அஸ்கிரி விஹாரையின் மகாநாயக்க தேரர், கலாநிதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரரும் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சுரேஷ் சலேயின் மனைவி அஸ்கிரி விஹாரைக்கு வருகை தந்து, தனது கணவர் சார்பாகக் கோரிக்கை விடுத்ததாக அந்தக் கடிதத்தில் மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன் கணவருக்கு ஏதேனும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும், அந்த வேண்டுகோளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சலேயின் மனைவி கேட்டுக்கொண்டதாகவும் அஸ்கிரி மகாநாயக்க தேரர் ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளார்.

