முறைகேடான விதத்தில் கட்டப்படும் மதில் குறித்து மானிப்பாய் பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலக பொறுப்பதிகாரியான நவரத்தினம் நவாஸ்சங்கருக்கு எழுத்து மூலம் அறிவித்தும் அதனை அந்த பொறுப்பதிகாரி கருத்தில் கொள்ளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
இது குறித்து பிரதேச சபையின் உப அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்த முறைப்பாட்டாளர் கருத்து தெரிவிக்கையில்,
பண்டத்தரிப்பு செல்லும் வீதியில் இருந்து பிரிந்து நிற்சாமம் செல்லும் வீதியில் ஐரிஸ் ஒன்று அமைக்கப்பெற்றுள்ளது. அந்த ஐரிஸ் ஊடாகவே தண்ணீர் வடிந்து செல்வது வழமை. அந்த ஐரிஸுக்கு அருகாமையில் உள்ள காணியின் உரிமையாளர் ஐரிஸுக்கு வெள்ளநீர் செல்லும் பகுதியில் மதலினை அமைக்க முற்பட்டுள்ளார்.
தடைப்பட்ட வடிகால்
இந்நிலையில் இது குறித்து நான் மானிப்பாய் பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரிக்கு 2025.04.10 அன்று எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அந்தவகையில் அந்த கட்டுமானமானது இடை நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் மீண்டும் இந்த ஆண்டு அந்த கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது அதே பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியபோது “கட்டுமானம் இடம்பெறுகிறதா?
நாங்கள் நிறுத்தி தானே வைத்திருக்கிறோம். சரி அது குறித்து விசாரணை செய்கிறேன்” என்று கூறினார்.
ஆனால் அந்த முறைப்பாடு கருத்தில் கொள்ளப்படாமல் மதல் முழுவதுமாக அமைக்கப்பட்டது. அந்த மதிலினை அமைத்த ஒப்பந்ததாரர் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரே என தெரியவருகிறது.
அந்த வெள்ளநீர் வடிந்தோடுவது தடைப்பட்டால் அதனால் பலநூற்றுக் கணக்கான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும். இவை அனைத்தும் தெரிந்த பின்னரும் பிரதேச சபையானது இவ்வாறு கவனயீனமாக இருந்துள்ளது.
வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம்
அந்த மதலுக்கு அண்மித்த பகுதியில் ஒரு வாய்க்கால் அமைத்து அதனூடாக வெள்ள நீரை வழிந்தோட செய்யவுள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால் அந்த வீதியில் அமைக்கப்பட்ட மதிலானது வீதியின் மத்தியில் இருந்து 3.5 மீற்றர் தொலைவில் அமைக்கப்பட வேண்டும் என்பதே பிரதேச சபையின் விதியாக உள்ளது.
ஆனால் அந்த தூரத்தினை விட குறுகிய தூரத்திலேயே மதில் அமைக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்கையில் வாய்க்காலும் மதிலுக்கு வெளியே அமைத்தால் வீதி இன்னும் சிறிதாக மாறிவிடும்.
எனவே மழைகாலம் ஆரம்பிக்க முன்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது.
இனிமேலாவது இது குறித்து மானிப்பாய் பிரதேச சபையானது விழிப்பாக செயற்பட வேண்டும் என்றார். இந்த விடயம் குறித்து பிரதேச சபையின் கருத்தினை கேட்பதற்கு அழைப்பு மேற்கொண்ட போதிலும் பிரதேச சபை தரப்பினர் அது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

