1983 ஜூலை மாதம் இலங்கையில் அரங்கேறிய கறுப்பு ஜூலை வன்முறை, உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது திடீரென வெகுண்டெழுந்த சிங்களப் பொதுமக்களின் தன்னிச்சையான கோபம் அல்ல. மாறாக, அன்றைய ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உயர் மட்ட அரசியல் தலைமைகளாலும் அரசு இயந்திரத்தாலும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓர் இனவழிப்புப் போராகும்.
இது காலத்தால் மறைக்கப்பட்டு திரிபுபடுத்தப்பட்டாலும் நேற்றைய(23.07.2026) நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற சிறப்பு விவாதத்தில் அனுர தரப்பு எம்.பி க்களால் இந்த குற்றச்சாட்டு பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருந்தன.
களு ஜூலையே செகவாது துமராய
குறிப்பாக கொழும்பில் தமிழ் மக்கள் எவ்வாறு திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர், அந்த கொலைகளுக்கான உதவிகள் எவ்வாறெல்லாம் வழங்கப்பட்டது, இந்த அரசியல் பின்புலத்தில் இருந்த கொடூரர்கள், அதன் பின் இது எப்படி தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு பரப்பப்பட்டது என்பதெல்லாம் குறித்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விடயம் அப்போது இலங்கையின் உள்நாட்டு போரை காரணம் காட்டி வெளிவராமல் சிங்கள மக்கள் மத்தியில் மறைக்கப்பட்டாலும், அந்த கொடூரத்தின் மறுபக்கம் 10 ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கையின் மூத்த மூத்த பத்திரிகையாளரான விக்டர் ஐவனால் உலகத்திற்கு வெளிச்சமிடப்பட்டது.
இலங்கையின் மூத்த மூத்த பத்திரிகையாளரான விக்டர் ஐவன் (Victor Ivan), தனது புகழ்பெற்ற ‘ராவய’ (Ravaya) பத்திரிகையில் எழுதிய “களு ஜூலையே செகவாது துமராய” (கறுப்பு ஜூலையின் மறைக்கப்பட்ட மறுபக்கம்) என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக் கட்டுரையின் வழியே, இதன் பின்னணியில் இருந்த பேரினவாத அரசியலையும், தமிழர்கள் சந்தித்துக் குருதி சிந்திய அவலங்களையும் ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
இக்கட்டுரையின் மிக முக்கியமான திருப்புமுனை, அன்றைய கொழும்பு மேயரும், ஆளும் UNP கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான கே. கணேசலிங்கம் (K. Ganeshalingam) வழங்கிய அதிர்ச்சியூட்டும் சாட்சியமாகும்.
விக்டர் ஐவன் நடத்திய தீவிர தேடலின் போது, “அரசாங்கம் ஏன் இந்த இனக் கலவரத்தை அனுமதித்தது? இதன் பின்னணியில் என்ன அரசியல் கணக்கு உள்ளது? என்று கேட்கப்பட்டபோது, கணேசலிங்கம் அந்த மறைக்கப்பட்ட உண்மையை வெளிப்படையாகப் உடைத்துள்ளார்.
‘ கறுப்பு ஜூலை என்பது நிறுத்த முடியாத ஒன்று. சிங்கள மக்கள் மத்தியில் உருவான இந்த நிலையை எப்படி மடை மாற்றுவது என்று எமக்கு தெரியவில்லை.
இந்த கலவரத்தில் என் பங்கு மட்டும் அல்ல ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து அங்கத்தவர்களினதும் பங்கு அமைந்திருக்கிறது.
இந்த காலத்தில் அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராகவும், அக்கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயராகவும் இருந்தவர் கணேசலிங்கம். இதன்போது பத்திரிகையாளர் ஐவன் பொறுமையிழந்து தமிழனாக நீர் எவ்வாறு இதற்கு துணைபோகலாம் என கேட்டுள்ளார்.
”ஒரு வெளிநாட்டு உயர்ஸ்தானிகரின் (High Commissioner) இல்லத்தில் நடந்த உத்தியோகபூர்வ இரவு விருந்து ஒன்றில் விக்டர் ஐவனும், கே. கணேசலிங்கமும் பங்கேற்றுள்ளனர். அங்கு மது பரிமாறப்பட்டிருந்த நிலையில், கணேசலிங்கம் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு முழுமையான மதுபோதைநிலையில் இருந்துள்ளார்.
அப்போது விக்டர் ஐவன் அவரிடம், 1981 இல் யாழ் நூலகத்தை எரிப்பதற்கு நீங்களும் (அமைச்சர்) சிறில் மத்தியூ போன்றோருடன் உடந்தையாக இருந்தீர்கள் தானே?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுபோதையில் இருந்த கே. கணேசலிங்கம் எவ்வித தயக்கமும் இன்றி, “அந்த நேரம் கள்ள வாக்குகளைப் போடுவதற்காகத்தான் நாங்கள் (கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு) போயிருந்தோம் என்பது உண்மை…” என்று உளறி ஒப்புக்கொண்டுள்ளார்
அரசின் உயர்மட்டத்தினரே திட்டமிட்டு கள்ள ஓட்டுப் போடவும், வன்முறையை ஏவவும் கொழும்பில் இருந்து குண்டர்களையும் அமைச்சர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தனர் என்ற கசப்பான உண்மையை ஒரு தமிழ் அரசியல்வாதியே போதையில் உறுதிப்படுத்திய நிகழ்வு இதுவாகும்.
யாழ் நூலக எரிப்பு
கணேசலிங்கம் போதையில் பேசியது 1981 யாழ் நூலக எரிப்புப் பற்றி என்றாலும், 1983 கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் பின்னணியிலும் இதே கே. கணேசலிங்கம், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க ஆகியோருடன் இணைந்து வன்முறையாளர்களுக்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் விக்டர் ஐவன் தனது பத்தி எழுத்துக்களில் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளார்.
இந்த காலத்தில் அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராகவும், அக்கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயராகவும் இருந்தவர் கணேசலிங்கம்.
இதன்போது பத்திரிகையாளர் ஐவன் பொறுமையிழந்து தமிழனாக நீர் எவ்வாறு இதற்கு துணைபோகலாம் என கேட்டுள்ளார்.
இதன்போது சூதா கரித்துக்கொண்ட அவர் மைதியாக இருந்ததாகவும், ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் உளறிக்கொட்டிய சந்தர்ப்பமாக இது அமைந்திருந்ததாக கூறப்படுகிறது
இதுபற்றி எக்காலமும் வாய் தீர்க்க கூடாது என பத்திரிகையாளர் விக்டருக்கு அழுத்தம் மிகு கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இந்த சந்திப்பு நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அதாவது 10ஆவது கருப்பு ஜூலை நினைவு நாளில் இந்த உண்மைகள் அனைத்தையும் விக்டர் ஐவன் பத்திரிகையில் இந்த விடயங்கள் அனைத்தையும் ‘களு ஜூலையே செகவாது துமராய” என்ற கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
அன்றைய காலகட்டத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான UNP அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளாலும், அரசியல் அடக்குமுறைகளாலும் சிங்கள மக்கள் மத்தியில் அரசு மீது கடும் அதிருப்தியும் கொந்தளிப்பும் நிலவியது.
இந்த மக்கள் கோபம் எந்த நேரத்திலும் அரசுக்கு எதிரான ஒரு பெரிய உள்நாட்டுக் கிளர்ச்சியாக வெடிக்கலாம் என UNP தலைமை அஞ்சியது.
எனவே, தங்கள் ஆட்சிக்கு வரவிருந்த பேராபத்தைத் தடுப்பதற்காகவும், சிங்கள மக்களின் கோபத்தை திசைதிருப்புவதற்காகவும், தமிழர்களைப் பலிகடாவாக்கி இந்த வன்முறையை UNP அரசாங்கமே திட்டமிட்டுத் தூண்டிவிட்டது.
இந்த வாக்குமூலத்தின் மூலம், ‘களு ஜூலை’ என்பது ஒரு சமூகக் கலவரம் அல்ல, UNP அரசு தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள நடத்திய திட்டமிடப்பட்ட அரசியல் சதி என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
தயார் செய்யப்பட்ட படுகொலைச் சதி
வன்முறையாளர்கள் வீதிக்கு வருவதற்கு முன்பே, தாக்குதலுக்கான தயாரிப்புகள் அரசிடமிருந்து துல்லியமாகச் செய்யப்பட்டிருந்தன என்பதை விக்டர் ஐவன் தனது கட்டுரையில் அம்பலப்படுத்தினார்:
1. வாக்காளர் பட்டியல்களின் துஷ்பிரயோகம்
கலவரக்காரர்கள் கைகளில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியல்கள் (Voters’ List) இருந்தன. எந்த வீடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள், எந்த வர்த்தக நிறுவனங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவை என்பதை அரச அதிகாரிகளின் உதவியோடு பட்டியலிட்டு, துல்லியமாகத் தாக்கி அழித்தனர்.
2. அரச பேருந்துகளும் எரிபொருளும்
தாக்குதல் நடத்தும் கும்பல்கள் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரைந்து செல்ல அரசப் போக்குவரத்துச் சபையின் (CTB) பேருந்துகள் வழங்கப்பட்டன. வீடுகளையும் கடைகளையும் எரிக்கத் தேவையான எரிபொருட்கள் அரசாங்கக் கிடங்குகளில் இருந்தே விநியோகிக்கப்பட்டன.
3. தமிழர் பொருளாதாரத்தை வேரறுத்தல்:
கொழும்பு, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்த தமிழர்களின் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள், ஆடை உற்பத்தியகங்கள், மற்றும் மொத்த வியாபாரக் கடைகள் எரிக்கப்பட்டு, தமிழர்களின் பல தசாப்த காலப் பொருளாதார பலம் ஒரே வாரத்தில் சாம்பலாக்கப்பட்டது.
எப்படியெல்லாம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்
1983 ஜூலை 24 இரவு தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாக தென்னிலங்கை முழுவதிலும் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள், மனிதநேயத்தின் மீதான மாறாத வடுக்களாகும்: வீதிகளிலும் சந்திப்புகளிலும் வாகனங்கள் மறிக்கப்பட்டன. உள்ளே இருப்பவர்கள் தமிழர்களா என்பதைக் கண்டறிய வன்முறையாளர்கள் கொடூரமான நுட்பங்களைக் கையாண்டனர்.
‘சிங்களப் பத்திரிகைகளை வாசிக்கச் சொல்வது’, சிங்கள மொழியில் சில கடினமான வார்த்தைகளை (எ.கா: ‘பாளம’ – பாலத்தைக் குறிக்கும் சொல்) உச்சரிக்கச் சொல்வது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன.
உச்சரிப்பில் தமிழ் அடையாளம் தெரிந்த கணமே, அவர்கள் பயணித்த பேருந்துகள், கார்களோடு சேர்த்தே பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்டனர். சொந்த வீடுகளுக்குள் புகுந்த கும்பல்கள், வீடுகளைச் சூறையாடி தீயிட்டன.
தாய்மார்களின் கண்முன்னே கைக்குழந்தைகள் தீயில் தூக்கி வீசப்பட்ட கொடூரங்களும், பெண்கள் வீதிகளில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. மேலும் அரசின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய அதிபாதுகாப்பு வெலிக்கடைச் சிறைச்சாலை, குருதி சிந்தும் கசாப்புக் கடையாக மாறியது.
சிறையிலிருந்த சிங்களக் கைதிகள் ஆயுதங்களோடு ஏவிவிடப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. தங்கத்துரை, குட்டாமணி, ஜெகநாதன் உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் இரும்புத் தடிகளாலும், கூர்மையான ஆயுதங்களாலும் குத்திக் கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டனர்.
குட்டாமணி சிறையிலும்கூட “தமிழீழம் அமையும் வரை என் கண்களைத் தமிழ் மக்களுக்குத் தானமாகக் கொடுங்கள்” என்று கூறியிருந்தார். அதற்காகவே வன்முறையாளர்கள் அவரின் கண்களைத் தோண்டி எடுத்து கொடூரமாக விளையாடியதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
அரசு இயந்திரத்தின் அமைதி
வன்முறை கொழுந்துவிட்டு எரிந்தபோது, அதைத் தடுக்க வேண்டிய காவல்துறையும் இராணுவமும் வேடிக்கை பார்த்தன. பல இடங்களில் வன்முறையாளர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டன.
ஜூலை 28 அன்று, வன்முறை உச்சத்திலிருந்தபோது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தொலைக்காட்சியில் தோன்றினார். ஆனால், அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவோ, வன்முறையைக் கண்டிக்கவோ இல்லை.
மாறாக, “சிங்கள மக்களின் தேசிய உணர்வுகளுக்குத் தமிழர்கள் சவால் விட்டதால் வந்த விளைவே இது” என்று கூறி, வன்முறையை நியாயப்படுத்தும் வகையில் பேசினார்.
இது வன்முறையாளர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்தது. 3,000-க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். (அரசின் அதிகாரப்பூர்வமற்ற கணக்குகள் இதைவிட அதிகம்).
ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் உடைமைகளை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டனர். கொழும்புத் துறைமுகத்திலிருந்து சரக்குக் கப்பல்கள் மூலம் தமிழர்கள் கால்நடைகளைப் போல ஏற்றப்பட்டு, வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தங்களின் உயிர் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுக்க இக்கறுப்பு ஜூலையே பிரதான காரணியாக அமைந்தது.
இந்த பல கொடூரங்களை உள்ளடக்கி விக்டர் ஐவன் தனது “களு ஜூலையே செகவாது துமராய” கட்டுரையின் வழியே வெளிக்கொணர்ந்த உண்மைகளும், UNP தலைவர் கே. கணேசலிங்கத்தின் அதிர்ச்சி வாக்குமூலமும், ‘கறுப்பு ஜூலை’ என்பது தன்னிச்சையான இனக் கலவரம் அல்ல.
மாறாக, அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பேரினவாத இனப்படுகொலை என்பதை நிரூபிக்கின்றன.
தமிழ் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வரலாற்றுத் துயரமும், அதன் பின்னணியில் இருந்த அரசியல் சூழ்ச்சிகளும், நீதிக்கான போராட்டத்தில் என்றும் மறக்க முடியாத, மறைக்க முடியாத வரலாற்றுச் சாட்சியங்களாகும்.

