நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹெரால்ட் தனது 89 ஆவது வயதில் காலமானார்.
ஒஸ்லோவிலுள்ள தேசிய வைத்தியசாலையில் இன்று காலை 6:35 மணியளவில் அவர் காலமானதாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பாவின் மிகவும் வயதான நாட்டின் தலைவராக இருந்த ஐந்தாம் ஹெரால்ட், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நோர்வே நாட்டின் அரசராகப் பணியாற்றியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜெர்மனி நோர்வே மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, சிறு வயதிலேயே தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் நாட்டிலிருந்து தப்பிச் சென்ற அவர், முதலில் சுவீடனுக்கும் பின்னர் அமெரிக்காவிற்கும் சென்றார்.
1945 இல் மீண்டும் நோர்வே திரும்பிய ஹெரால்ட், நோர்வே அரச பாடசாலைகள், இராணுவக் கல்லூரி மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.
பாடசாலைக் காலத்தில் தனது காதலியான சோஞ்சா ஹெரால்ட்சனை (Sonja Haraldsen) திருமணம் செய்வதற்காக, ஐரோப்பிய அரச குடும்பங்களின் இளவரசிகளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வந்த முன்மொழிவுகளை பல ஆண்டுகள் நிராகரித்தார்.
இறுதியாகத் தந்தையின் அனுமதியைப் பெற்று 1968 இல் சோஞ்சாவைத் திருமணம் செய்து கொண்டார்.
1991 ஜனவரி 21 ஆம் திகதி தனது தந்தையான ஐந்தாம் ஓலாஃப் மன்னரின் மறைவுக்குப் பிறகு அரியணை ஏறிய ஹெரால்ட், நோர்வே முடியாட்சியை நவீனமயமாக்க நடவடிக்கை எடுத்தார்.
2011 ஆம் ஆண்டு நோர்வேயில் 77 பேரைக் கொன்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அவர் நிகழ்த்திய உணர்வுபூர்வமான உரை மற்றும் 2016 ஆம் ஆண்டு LGBTQ+ உரிமைகள், அகதிகள் மற்றும் மத நல்லிணக்கத்திற்காக அவர் ஆற்றிய உரை சர்வதேச கவனத்தைப் பெற்றது.
மன்னரின் மறைவு காரணமாக முழு நாடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் ஹெரால்ட் மன்னரின் மறைவைத் தொடர்ந்து, அவரது மகனான இளவரசர் ஹாகன் (Haakon), நோர்வேயின் புதிய அரசராக அரியணை ஏறவுள்ளார்.

