தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், வியாழக்கிழமை (27) நடைபெற்ற மாநிலச் சட்டமன்றத்தின் பிற்பகல் கூட்டத்தின்போது, தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையிலிருந்து விலகிச் சென்று முன்வரிசையில் இருந்த அமைச்சர்களுக்கு அருகில் அமர்ந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
வழக்கமாக முதலமைச்சர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு அருகிலேயே தனி இருக்கையில் அமர்வது வழக்கம் என்பதால், முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கை கவனத்தை ஈர்த்தது.
கவனம் ஈர்த்த செயல்
அமைச்சர்கள் முதலமைச்சருடன் இணைந்து முதல் வரிசையில் தனித்தனியாக அமர்வார்கள். இவர்களது இருக்கைகள் பொதுவாக மூப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அமரும் இடங்களுக்கு நேர் எதிரே உள்ள வரிசையில் எதிர்க்கட்சியினர் அமர்கின்றனர். 234 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பல்வேறு சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப அமர்த்தப்படுகின்றனர்.
அவர்களுக்குப் பின்னால் கட்சி உறுப்பினர்கள் அமர்கின்றனர். இன்னிலையில் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற நடவடிக்கைகளின்போது, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு வலதுபுறம் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையிலிருந்து சாதாரணமாக எழுந்த விஜய், அவையின் முன்னவரான அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே உள்ள இருக்கையில் அமர்ந்தார்.
அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் சக உறுப்பினர்களுடன் சுருக்கமாகப் பேசுவதற்காக அவ்வப்போது இருக்கைகளை மாற்றுவதுண்டு என்றாலும், முதலமைச்சர் ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

