கடந்த மே மாதம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவு தினத்தில் பங்கேற்பதற்காகச் சென்றபோது, போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒப்பு கொண்ட மூன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் தினமின்று நினைவு தினத்திற்காக சென்ற பல மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதனைதொடர்ந்து, மே 23ஆம் குறித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அபராதத் தொகை
பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மே 23 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், தலா 150,000 ரூபாய் மதிப்பிலான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட வழக்கு ஜூன் 16 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மூன்று சந்தேக நபர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து, அவர்களுக்கு 11,500 ரூபாய், 11,500 ரூபாய் மற்றும் 17,500 ரூபாய் முறையே அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அபராதத் தொகையைச் செலுத்திய பின் அவர்களை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

