யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுவன் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துயர சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புலோலி தெற்கு பகுதியை சேர்ந்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளான்.
விசாரணை
அது தொடர்பில் வீட்டார் பருத்தித்துறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளையும் தேடுதல்களையும் காவல்துறையினர் மேற்கொண்டதுடன், ஊறவர்களும் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள கிணறொன்றில் சிறுவனின் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

