ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமுக்குத் தாம் வழக்கறிஞராகச் செயல்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முற்றாக மறுத்துள்ளார்.
ஒரு பத்திரிகையாளர் குழு முன்வைத்துள்ள தொடர்புடைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, தீய நோக்கமுடையவை மற்றும் தவறாக வழிநடத்துபவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தங்களைப் பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் இந்தப் பொய்யான தகவலைப் பரப்பி வருவதாக குணரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
இழிவான முயற்சி
நீதிமன்றத்தில் முன்னிலையாகாத ஒரு சந்தேக நபருக்காக முன்னிலையானதாக கூறுவது, தமது அரசியல் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத் தலையீடுகளையும் குறிவைத்து தமக்கு எதிராக வெறுப்பைப் பரப்பும் ஒரு இழிவான முயற்சி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, சஹ்ரானுக்கு தாம் வழக்கறிஞராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு மைத்திரி குணரத்ன சவால் விடுத்துள்ளார்.
மேலும், அவர்கள் கூறுவது போல் தாம் சஹ்ரானுக்கு வழக்கறிஞராகச் செயல்பட்டிருந்தால், அந்த வழக்கு எண்ணையும் அது விசாரிக்கப்பட்ட நீதிமன்றத்தையும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சஹ்ரானின் வழக்கு
ஈஸ்டர் தாக்குதல்களுக்கு வெகு காலத்திற்கு முன்பே, சஹ்ரானும் ஒரு சந்தேக நபராக இருந்த ஒரு வழக்கில் தாம் மற்றொரு சந்தேக நபருக்காக வாதாடியிருந்தபோதிலும், அந்த சந்தேக நபர் ஈஸ்டர் தாக்குதல்களை வழிநடத்திய சஹ்ரான் அல்ல என்று மைத்ரி குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், தன்னை நோக்கிச் சொல்லப்படும் இதுபோன்ற வெறுப்பு நிறைந்த கூற்றுகள், தமது சமூகச் செயல்பாடுகளைத் தடுத்துவிட முடியாது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

