பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காகத் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த, கஞ்சா கலந்த 3,755 மதனமோதக மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுர்வேத திணைக்களத்தின் எவ்வித அனுமதியோ அல்லது உரிமமோ இன்றி, நுவரெலியா பழைய கடை வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இவற்றை விற்பனை செய்ய முயன்ற போதே, நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (08) பிற்பகல் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் உரிமம் இன்றி ஆயுர்வேத கடை ஒன்றை நடாத்திச் செல்வது போல் நடித்து, மதனமோதக மாத்திரைகளை விற்பனை செய்வதற்கே முன்னுரிமை அளித்து வந்துள்ளார் என்றும், அந்த வர்த்தக நிலையத்திற்கு இளைஞர்கள் அடிக்கடி மதனமோதக மாத்திரைகளை வாங்குவதற்காக வருகை தருகின்றனர் என கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட மதனமோதக மாத்திரைகளையும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

