பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, மற்றுமொரு முக்கிய குற்றவாளியான ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பாதாள உலகக் கும்பலின் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், வெலிசர அதிவிசேட பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘தெமட்டகொட சமிந்த’ என அழைக்கப்படும் சமிந்த ரவி ஜயநாத்திடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு (CCD) நீதிமன்றம் இன்று (05) அனுமதி வழங்கியது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்வைத்த விசேட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதன்படி, சிறைச்சாலைக்குள் வைத்தே அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலத்தைப் பதிவு செய்யப் பொலிஸாருக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சதி மற்றும் அதன் பின்னணியில் உள்ள தொடர்புகள் குறித்துப் பல திணிக்கப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சிறையில் இருக்கும் தெமட்டகொட சமிந்தவிடம் விசாரணை நடத்துவது முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொட சமிந்த, தற்போது பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வெலிசர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பலரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தெமட்டகொட சமிந்தவின் வாக்குமூலம் வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளுக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

