நியூசிலாந்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் பராமரிப்பாளராகப் பணிபுரிந்த இலங்கையைச் சேர்ந்த நபரொருவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிலுஷன் ஜயங்க சில்வா கிந்தோட்டா விதானகே என்ற இந்த இலங்கை நபருக்கு முதியவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரு முதிய பெண்களுடன் சட்டவிரோத பாலியல் தொடர்பு
இவர் மீது ஒரு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டும், இரு முதிய பெண்களுடன் சட்டவிரோத பாலியல் தொடர்பு கொண்ட இரு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,11 வயது சிறுமி ஒருவரைத் தனது காரில் ஏறுமாறு மிரட்டிய மற்றொரு குற்றச்சாட்டையும் நீதிமன்றத்தில் இவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்தச் சிறுமி காரின் பதிவு எண்ணைக் குறித்துக் கொடுத்ததால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட முதியவர்கள் உடல் மற்றும் மனரீதியாகப் பலவீனமானவர்கள் என்றும், அவர்களின் நல்வாழ்வுக்குப் பொறுப்பான பராமரிப்பாளரே இந்த நம்பிக்கைத் துரோகத்தைச் செய்துள்ளார் என்றும் நீதிபதி ஜேன் ஃபாரிஷ் கடுமையாகக் கண்டித்துள்ளார். அத்துடன்,குற்றவாளி தன் குற்றங்களுக்கு எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை.
அவர் தனது சிறைத்தண்டனையின் மூன்றில் ஒரு பகுதியை அனுபவித்த பிறகு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த இல்லத்தில் வேறு யாரும் பாதிக்கப்படவில்லை என்று நம்புவதாகவும், இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் முன்வந்து தெரிவிக்கலாம் என்றும் நியூசிலாந்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேசமயம் சம்பந்தப்பட்ட முதியோர் இல்லத்தின் பெயர் நீதிமன்ற உத்தரவின்படி வெளியிடப்படவில்லை.

