வீதி விபத்துகளில் 30 சதவீதமானவை நாய்கள் காரணமாகவே ஏற்படுவதாக, மனோபாவ முறைகள் மூலம் விலங்குகளின் தொகையைக் முகாமை செய்வதற்கான கால்நடை வைத்தியர்கள் ஒன்றியத்தின் ஸ்தாபகர் வைத்தியர் சமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாய்கள் கடிப்பதனால் நீர்வெறுப்பு தடுப்பூசிகளை வழங்குவதற்காக மட்டுமே வருடத்திற்கு சுமார் 1 பில்லியன் ரூபாய் வரை பெருந்தொகை பணம் செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிலைமை நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், மனிதர்களின் பொறுப்பற்ற செயல்பாடுகள் மற்றும் சமூகப் பொறுப்பு உணர்வு இன்மையின் காரணமாகவே இவ்வாறு தெரு நாய்கள் உருவாவதாகவும் வைத்தியர் சமித் நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டினார்.
இப்பிரச்சனைக்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அதன்கீழ் உரிமையாளர் உள்ள ஒவ்வொரு நாயும் சம்பந்தப்பட்ட பிரதேச சபையில் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், உரிமையாளர் அல்லது பராமரிப்பாளர் எவருமின்றி தெருக்களில் வாழும் நாய்களின் முழுமையான பொறுப்பையும் பிரதேச சபையே ஏற்க வேண்டும் என இந்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, அத்தகைய விலங்குகளுக்குத் தடுப்பூசி போடுதல் மற்றும் கருத்தடை செய்தல் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பேற்கும் என்பதால், வீதியில் உள்ள எந்தவொரு நாயும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படாது என்றும், இது மிகவும் சிறந்ததொரு எண்ணக்கரு என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த வைத்தியர் சமித் நாணயக்கார,
“இப்போது ஒருபுறம் நாய் கடித்த பிறகு தடுப்பூசி போடுவதற்கு வருடத்திற்கு 1 பில்லியன் ரூபாய் செலவாகிறது. நாட்டின் பணம். மறுபுறம் வீதி விபத்துகளில் 30%. இது நாட்டின் பொருளாதாரத்தை எவ்வளவு தூரம் பாதிக்கிறது. அப்படியானால் இந்த விலங்குகள் வீதியில் இருப்பது அவற்றின் விருப்பத்திலா? இல்லை. மனிதர்களின் பொறுப்பற்ற செயல்முறை மற்றும் சமூகப் பொறுப்பு பற்றிய புரிதல் இல்லாததால் மனிதர்களால் வீதியில் கொண்டு வந்து போடப்படும் விலங்குகளே இவ்வாறு வீதிகளில் பெருகி வருகின்றன. அவ்வாறு வீதியில் விடப்பட்ட விலங்குகளுக்கு, மனிதர்கள் தங்கள் கழிவுகளைச் சரியாக முகாமை செய்யாமல் வீதியில் வீசுவதால், இந்த விலங்குகள் மேலும் மேலும் பெருகி இந்தப் பிரச்சனை உருவாகியுள்ளது.
இந்தப் புதிய சட்டத்திற்குள் எவ்வாறு நிரந்தரத் தீர்வு கொண்டுவரப்படுகிறது? இதில் பிரதானமாக, உரிமையாளர் உள்ள ஒரு நாய், சம்பந்தப்பட்ட பிரதேச சபையில் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அது முதல் விஷயம். அப்படியானால் வீதியில் இருக்கும் விலங்குகளுக்கு என்ன செய்வது? உரிமையாளரும் இல்லை, பராமரிக்க ஆளுமில்லை. அப்போது நாம் என்ன செய்வது? அந்த விலங்குகளின் பொறுப்பை பிரதேச சபை ஏற்க வேண்டும் என்பது இந்தச் சட்டத்திற்குள் தெளிவாகப் பேசப்பட்டுள்ளது. எனவே, வீதியில் இருக்கும் எந்தவொரு விலங்கும், இந்த எந்தவொரு நாயும் ஆதரவற்றதாக மாறாது. ஏனெனில் அந்த விலங்கின் தடுப்பூசி மற்றும் கருத்தடை தொடர்பில் அரசாங்கம் பொறுப்பேற்கிறது. இது மிகவும் நல்லதொரு எண்ணக்கருவாகும்” எனக் கூறினார்

