இலங்கை இராணுவத்திற்கு ட்ரோன்களை விற்பனை செய்வதில் துருக்கி ஆர்வம் காட்டி வருவதாக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் செமிஹ் லுத்ஃபு துர்குட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக துருக்கியின் தொழில்நுட்பக் குழுவொன்று மிக விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச இராஜாங்கக் கல்வி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய தூதுவர், அனைத்துத் துறைகளிலும் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தத் தமது நாடு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ட்ரோன்களின் முக்கிய பணி
துருக்கியில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் குறித்த விளக்கங்களை வழங்குவதற்காக இந்தத் தொழில்நுட்பக் குழு இலங்கைக்கு வருகை தந்த பின்னர், மேலதிக அவதானிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று துருக்கிக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த ட்ரோன்களின் முக்கிய பணி பாதுகாப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

