பொருட்கள் இறக்குமதி என்ற போர்வையில், பெருமளவிலான அமெரிக்க டொலர்கள் நாட்டிலிருந்து கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து பெருமளவிலான அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் நேற்று(09.06.2026) இந்த திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
போலியான நிறுவனங்களைப் பதிவு செய்து
பொலிஸாரும் மத்திய வங்கியும் இணைந்து நடத்திய கூட்டுப் புலனாய்வு விசாரணைகளின் போதே இந்த மாபெரும் நிதி மோசடி அம்பலமாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுங்கத் திணைக்களம் மூலம் எந்தவொரு பொருளையும் நாட்டுக்குள் இறக்குமதி செய்யாமல், போலி நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்புகள் ஊடாக மட்டும் முறையே 42 மில்லியன் மற்றும் 43 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், என்.டி.பி வங்கி கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய சுமார் 13 பில்லியன் ரூபா அளவிலான பணமும் சட்டவிரோதமான இந்த வழிமுறையை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளது.
மோசடிக்காரர்கள் திட்டமிட்ட அடிப்படையில் போலியான நிறுவனங்களைப் பதிவு செய்து, அவற்றின் பெயர்களில் இறக்குமதி அனுமதி பெற்றுள்ளனர்.
தொலைத்தொடர்பு மற்றும் இதர வங்கி வழிகளைப் பயன்படுத்தி பில்லியன் கணக்கில் டொலர்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளனர்.
ஆனால், அதற்கீடாக ஒரு சிறிய பொருளைக் கூட அவர்கள் இலங்கைக்குள் இறக்குமதி செய்யவில்லை.
இலத்திரனியல் பணப்பரிமாற்ற தரகர்கள்
கடந்த சில மாதங்களாகப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இந்த மோசடியின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெஹலியகொட பகுதியில் மேற்கொண்ட சோதனையில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து 3 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் 953 சந்தர்ப்பங்களில் இலத்திரனியல் பணப்பரிமாற்ற தரகர்கள் மூலம் 1,289 கோடி ரூபாயையும், 26 நிறுவனங்கள் மூலம் 256 கோடி ரூபாயையும் பரிமாற்றியுள்ளனர்.
இதன் மூலம் மட்டும் 42.2 பில்லியன் டொலர் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளது.
2024 இல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூலம், மோசடிப் பணம் தனிநபர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு, பின்னர் அவை சர்வதேச கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதில் 108 நாடுகளுக்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளதுடன், சுமார் 43 மில்லியன் டொலர் வரை மோசடி நடந்துள்ளது.
இறக்குமதி என்ற போர்வையில் எவ்வித பொருட்களும் இன்றி 26,260 சந்தர்ப்பங்களில் 13 வங்கிகளைப் பயன்படுத்திப் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மோசடியுடன் 105 உள்நாட்டு நிறுவனங்களும், 55 நிறுவனச் செயலாளர்களும் தொடர்புபட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை
இறக்குமதி என்ற போர்வையில் பணத்தை அனுப்பிவிட்டு, நிறுவனங்களை மூடிவிட்டு வேறு நிறுவனங்களைத் திறக்கும் ஒரு மாபெரும் சதிச் சக்கரம் இயங்கி வருகின்றது. இதற்கு சில அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதா என்பது குறித்தும் தற்போது நிதியியல் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவசரமாக அழைத்து ஆலோசித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக, இனிவரும் காலங்களில் பொருட்களை இறக்குமதி செய்யும் அனைத்து நிறுவனங்களும், நிறுவனப் பதிவாளரின் சான்றிதழுடன், மத்திய வங்கியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தங்களைப் பதிவு செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
முறையான பதிவு இல்லாத எந்தவொரு நிறுவனத்திற்கும் இறக்குமதி அனுமதியோ அல்லது வெளிநாட்டுப் பணப்பரிமாற்ற அனுமதியோ வழங்கப்பட மாட்டாது என அரசு அறிவித்துள்ளது.

