வரையறுக்கப்பட்ட லங்கா சீனி தனியார் நிறுவனத்தின் செவனகல பிரிவிலுள்ள தொழிற்சாலையை மறு அறிவித்தல் வரை காலவரையறையின்றி மூடுவதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நிறுவனத்திற்கு ஏற்படும் நிதி இழப்பைக் குறைக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணி முதல் செவனகல பிரிவின் சில ஊழியர்கள் தமது கடமைகளிலிருந்து விலகி, உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், இதன் காரணமாக ஏற்படும் நிதி இழப்பைத் தடுப்பதற்காகக் கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களிலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்றைய தினம் (28) மீண்டும் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரியினால் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தொழிற்சாலையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் ஊழியர்கள் வழக்கம் போல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்ததன் காரணமாகவே, இவ்வாறு தொழிற்சாலையைக் காலவரையறையின்றி மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

