இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய காதலியை பாபநாசம் திரைப்பட பாணியில் கொன்று புதைத்துள்ளார் இளம் மருத்துவர் ஒருவர்.
குறித்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், சம்பவத்தின் போது பதிவான அவரது மொபைல் இருப்பிடத்தை வைத்து கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் சத்னா பகுதியில் பல் மருத்துவராக பணியாற்றி வருபவர் அசுதோஷ் திரிபாதி. இவரது சுகாதார மையத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார் 24 வயதான விபா கெவத்.
இருவரும் காதலித்து வந்த நிலையில், விபா தம்மை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார்.
ஆனால் விபாவை திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லாத மருத்துவர் அசுதோஷ்,
கடந்த டிசம்பர் 14ம் திகதி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் நாய் ஒன்றின் சடலத்தையும் ஏற்பாடு செய்துள்ளார்.
நாயை புதைக்க வேண்டும் என கூறி, சில தொழிலாளர்களை அழைத்து, பயன்பாட்டில் இல்லாத மனை இடம் ஒன்றில் குழி தோண்ட வைத்துள்ளார்.
பின்னர் தொழிலாளர்களை அனுப்பி வைத்துவிட்டு, தமது காதலியின் சடலத்தை குழிக்குள் வைத்து அதன் மீது களிமண்ணால் மூடியுள்ளார்.
பின்னார் அதன் மீது நாயையும் சேர்த்து, அந்த குழியை மூடியுள்ளார். இதனிடையே விபாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் பொலிசாரை நாடியுள்ளனர்.
விசாரணை முன்னெடுத்த பொலிசாரிடன், விபாவுக்கும் குடும்பத்தினருக்கும் பிரச்சனைகள் இருந்தது எனவும், அவர் தனியாக வாழ விரும்பி சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், குறித்த வழக்கை தீவிரமாக விசாரித்த பொலிசார், டிசம்பர் 14ம் திகதி விபாவும் அசுதோஷும் ஒரே பகுதியில் கடைசியாக சந்தித்துள்ளதை மொபைல் டவர் பதிவாக் கண்டறிந்தனர்.
அதன் பின்னர் அசுதோஷை அழைத்து முறைப்படி விசாரித்ததில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது விபாவின் அழுகிய உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டாலும், பல கேள்விகள் இன்னமும் எஞ்சியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கைதாகியுள்ள அசுதோஷிடம் இந்த வழக்கு தொடர்பில் தொடர் விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.