பாராளுமன்றில் சுயேட்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனாவின் இருக்கையை மாற்றித் தருமாறு கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரை எழுத்து மூலம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில், தாங்கள் அறிந்தவாறு, பாராளுமன்றத்தில் எனக்கு இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிரங்கமாக என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசியும், வன்முறை ரீதியாக அச்சுறுத்தியும், இழிவான சொற்களைப் பயன்படுத்தியும் வருகிறார்.
அவரது இந்த நடத்தை அண்மைக்காலமாக மிகவும் மோசமடைந்துள்ளதுடன், பாராளுமன்ற சபை மண்டபத்தில் அவர் எனக்கு அருகில் அமர்ந்திருப்பது எனது கவனத்தை சிதறடிப்பதால், அவரை எனக்கு அருகில் அமர வைப்பது எனக்கு சாத்தியமற்ற ஒன்றாக மாறியுள்ளது.
குறித்த உறுப்பினர் ஒரு சுயேட்சைக் குழுவிலிருந்து முதன்முறையாகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராவார். பொதுவாக, இவ்வாறான உறுப்பினர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அனைத்து சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குப் பின்னரே ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழமையாகும்.
எனினும், வழக்கமான நடைமுறைக்கு மாறாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அமருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, இவ்விடயத்தில் தாங்கள் தலையிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்களுக்குப் பின்னர் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களை அமர வைக்கும் சாதாரண நடைமுறைக்கு இணங்க, அவரது இருக்கையை மாற்றுமாறு கோரியுள்ளார்.

