போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்துமாறு கோரி வரும் போலிச் செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இவ்வாறான செய்திகள் போக்குவரத்துப் பிரிவினரால் அனுப்பப்படுவதில்லை என காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய போலி குறுஞ்செய்திகளுக்கு எவ்விதப் பதிலும் அளிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசின் உத்தியோகபூர்வ GovPay
இது குறித்த அறிக்கையில், “அரசின் உத்தியோகபூர்வ GovPay இணையதளத்தைப் போல போலி இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடுவது தொடர்பாக.
இலங்கை அரசின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை பாதுகாப்பாகவும் எளிமையாகவும் இணைய வழியில் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கட்டண முறையே GovPay ஆகும். வாகன சாரதிகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில், காவல்துறையால் வழங்கப்படும் இடத்திலேயே வழங்கப்படும் அபராதப் பத்திரங்களுக்கான தொகையையும் இந்த முறையின் ஊடாக செலுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த உத்தியோகபூர்வ முறையைப் போன்ற போலி இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட பல சம்பவங்கள் இலங்கை காவல்துறையால் கண்டறியப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

