கண்டி, தெல்தெனிய, ரங்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடிஸ்பத்துவ – ஹக்மன பிரதேசத்தில் 22 வயதுடைய ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சடலம் நீதிவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இக்கொலைச் சம்பவம் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ரங்கல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் பேரில், ரங்கல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த ஜயரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இந்தச் சடலத்தை நேற்று மீட்டுள்ளனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருந்த பெண், உடிஸ்பத்துவ – ஹக்மன பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய வீரசேகர முதியான்சேலாகே ஹீன்பிட்டகெதர வாசனா சந்தமாலி என்ற யுவதி என ரங்கல பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தெல்தெனிய நீதிவான் கமல் சஞ்சய ஜயதிலக சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தினார்.
உயிரிழந்த பெண்ணுடன் கடந்த நான்கு வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த அவரது ஆண் நண்பரே இக்கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர் சில நாட்களுக்கு முன்னர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, உயிரிழந்த பெண்ணைத் தனது மனைவி எனக் கூறி, அவர் காணாமல் போயுள்ளார் என்றும், அவருக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாகவும் நாடகமாடி முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததைத் தொடர்ந்து சந்தேகநபர் திடீரென தலைமறைவாகியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பொலிஸார், அவரது தாயாரிடம் நடத்திய தீவிர விசாரணையின் போதே, சந்தேகநபர் தனது மனைவியைப் பிரிந்து இப்பெண்ணுடன் வாழ்ந்து வந்த உண்மை விபரம் அம்பலமாகியுள்ளது.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைத் தேடி ரங்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சடலம் தொடர்பான மேலதிக பிரேதப் பரிசோதனைகளைத் தெல்தெனிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உபுலி பண்டார ஊடாக மேற்கொண்டு, அது குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ரங்கல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

