இந்தியாவில் இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டமைக்காக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணேஸ்வரன் (69) மற்றும் அவரது மனைவி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடையாள அட்டை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் குறித்த இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது
தொடர்ச்சியாக அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் முடிவில் குறித்த இருவரும் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், குறித்த இருவரும் இலங்கை செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

