நீதிமன்றத்தில் முறையாக முன்வைத்து, விடுதலையாவதற்கான உரிமை உண்டு.”
“எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 3,390 கிலோ ஹெரோயின், 304 கிலோ கொகெய்ன், 5,543 கிலோ ஐஸ், 1,521 கிலோ குஷ் மற்றும் 5,110,731 போதை மாத்திரைகளும், 2,454,267 போதை குளிசைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நச்சுப் போதைப்பொருட்களைக் கைப்பற்றுவதற்காக நாம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கடல் எல்லையில் கடற்படையினர் பாரிய பங்காற்றி வருகின்றனர். எனினும் இவை இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அனைத்து இடங்களிலும் இதனை ஒடுக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்தஸ்து தராதரம் பாராது நாம் பலரைக் கைது செய்துள்ளோம்.”
“அதேபோன்று, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கும் பாரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நாம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த 23 பேரை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவந்துள்ளோம். மேலும் பல்வேறு வழிகளில் இவற்றுடன் தொடர்புடைய 35 பேர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். சிலர் சிறைச்சாலையில் இருந்துகொண்டே இவற்றை இயக்கியுள்ளனர்.”
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் பாரிய தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், இதனை ஒரே இரவில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, போதைப்பொருள் வலையமைப்பை இலங்கையிலிருந்து முற்றிலும் ஒழிப்பதாகவும் இங்கு தெரிவித்தார்.
இதற்காக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் ஜனநாயகத்திற்குப் புறம்பாக செய்யப்படமாட்டாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எவரும் ஆட்சியாளரைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.
எமக்குத் தேவை ஆட்சியாளருக்குப் பயப்படும் ஒரு சமூகம் அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சியாளரைத் தொடர்ச்சியாகக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு நிர்வாகமே எமக்குத் தேவை என்றும் கூறினார்.
“நீண்ட காலமாக, 1979 ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, விசேட ஏற்பாடுகளைக் கொண்ட தற்காலிகச் சட்டமாகவே கொண்டுவரப்பட்டது. ஒரு வருட கால தற்காலிகச் சட்டமாகவே PTA கொண்டுவரப்பட்டது. இப்போது 46 வருடங்களாக இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு கோரி ஒரு போராட்டம் இருந்தது. தங்களது சுதந்திரத்தை விரும்பும் மனிதர்களுக்கு, இந்த கடுமையான சட்டம் குறித்து நாட்டில் ஒரு பிரச்சினை இருந்தது. நீண்ட காலமாக மக்கள் அந்தச் சட்டத்தை நீக்குமாறு போராடினார்கள். நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன், இவ்வருடத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படும்.”
“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கான வரைவிலக்கணம் சரியாகச் சுருக்கப்பட்டு, அது தயாரிக்கப்படும். அதில் பரந்ததொரு வரம்பு உள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகள், பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உரிமை என்பன முற்றிலும் பாதுகாக்கப்படும் வகையில், திருத்தங்களுக்கு உட்படுத்தி அதனை மிக விரைவில் செய்வோம். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை மட்டுமே இலக்காகக் கொண்ட ஒரு வரையறைக்கு உட்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்திற்கான புதிய சட்டமூலத்தை நாம் கொண்டு வருவோம்.” என்றார்.

