தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது.
டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.
நீர் இருப்பு
இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும்” என தமிழக அரசின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதன்போது, கர்நாடகாவில் நிகழாண்டில் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் 50% அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பில் உள்ளது. எனவே தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட இயலாது என கர்நாடக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்துக்கு நீர்
இதனை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு, “உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும். மழை பற்றாக்குறை காரணமாக அணைகளில் உள்ள நீர் இருப்பின் அளவுக்கு ஏற்றவாறு நீரை பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3500 கன அடி நீரை திறந்துவிட வேண்டும்.
இதனை ஜூலை 29-ம் திகதி காலை 8 மணி முதல் இருமாநில எல்லையான பிலிகுண்டுலு அளவீட்டு நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.
எனினும் அவசர ஆலோசனையில் பின், மழை பெய்யாததால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட இயலாது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட உள்ளோம் என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

