தமிழகத்தில் மு.க. ஸ்டாலினின் திராவிர முன்னேற்றக் கழகம் (திமுக) அல்லது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்று ஆட்சி அமைக்க முயன்றால், கட்சியின் 107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே) நேற்று (07) எச்சரித்ததாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திமுக மற்றும் அதிமுக தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற இரண்டு சுற்று சந்திப்புகளைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதிக இடங்களைப் பெற்ற கட்சியைப் புறக்கணித்துவிட்டு, இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் கைகோர்த்து ஆட்சி அமைக்க முயற்சிக்கக்கூடும் என்று டிவிகே கட்சி தற்போது சந்தேகிக்கிறது.
விஜய் வென்ற இரண்டு இடங்கள் உட்பட 108 இடங்களைப் பெற்ற டிவிகே, தற்போது 107 சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தைக் கொண்டுள்ளதுடன், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான முதல் வாய்ப்பு தனக்கே உரியது என்றும் கூறி வருகிறது.
இதற்கிடையில், போதுமான உறுப்பினர்கள் இல்லை என்று கூறி, விஜய் ஆட்சி அமைக்கும் கோரிக்கையை ஏற்க தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் CNN-News18 செய்திச் சேவையின் அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட தகவல்களின்படி, பெரும்பான்மை இடங்களை நிரூபிப்பது குறித்த விஜய்யின் திட்டங்களில் திருப்தியடையாத ஆளுநர், இரண்டு நாட்களில் நடந்த இரண்டாவது கூட்டத்தின்போது 118 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார்.
டிவிகேவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் அதன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் வியாழக்கிழமை லோக் பவனில் இரண்டாவது முறையாக விஜய் – ஆளுநருக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
ஸ்டாலின் நிலைப்பாடு
பதவி விலகும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், விஜய் அரசை அமைக்கும் வரை திமுக காத்திருக்கும் என்றும், ஆறு மாதங்களுக்கு அதில் எந்த இடையூறும் செய்யாது என்றும் கூறியுள்ளார்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமையக்கூடும் என்ற யூகங்களை ஸ்டாலின் நிராகரிப்பது போல் தோன்றியது.
மேலும், மற்றொரு தேர்தலையோ அல்லது அரசியலமைப்பு ரீதியான நிச்சயமற்ற நிலையையோ கட்சி தவிர்க்க விரும்புவதாகவும், புதிய திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு, திமுக அரசால் தொடங்கப்பட்ட முக்கிய நலத்திட்டங்களையும் தொடரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

