இலங்கையின் மூத்த பத்திரிகையாளரும் பாதுகாப்பு விவகார ஆய்வுத்துறையின் ஜாம்பவானுமான (Iqbal Athas) இக்பால் அத்தாஸ் இன்று (13) அதிகாலை காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 81 ஆகும்.
தெஹிவளையில் உள்ள கிராண்ட் மசூதி மயானத்தில் இன்று பிற்பகல் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
அவரது பூதவுடல் காலை 9.00 மணி முதல் இல 11 C/1 , ஸ்ரீவர்தன வீதி, தெஹிவளை என்ற முகவரியில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இலங்கை ஊடகப் பரப்பில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இக்பால் அத்தாஸ் இருந்தார்.
உள்நாட்டுப் போரின் போது ஆயுதக் கொள்வனவுகளில் நடந்த கோடிக்கணக்கான ஊழல்களை இவர் அம்பலப்படுத்தினார்.
குறிப்பாக ‘MiG-27’ விமானக் கொள்வனவு ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தபோது முழு நாடும் அதிர்ந்தது.
துப்பாக்கி ஏந்தியவர்கள் அவர் வீட்டிற்குள் நுழைந்து அச்சுறுத்திய போதும், அரசாங்கம் அவருக்கு வழங்கிய பாதுகாப்பை விலக்கி நெருக்கடி கொடுத்தபோதும், அவர் தனது கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை.

