உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் காட்சிப்படுத்தப்படும் விளம்பர அறிவித்தல்கள் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளின் அதிகார எல்லைக்குள், மாநகர முதல்வர்/தவிசாளரினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் இல்லாது எவரேனும் ஆளினால் பகிரங்க இடங்களிலிருந்து பார்க்கும் போது புலப்படக்கூடியதாக எந்தவொரு விளம்பர அறிவித்தல்லையும் காட்சிப்படுத்தவோ காட்சிக்கு வைக்கவோ கூடாது என நியமத்துணைவிதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் நியமத்துணைவிதிகளுக்கு அமைய அனுமதி பெற்றுக்கொள்ளாது விளம்பர அறிவித்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளினால் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
இந்த நிலையில் அதிகார எல்லைக்குள் விளம்பர அறிவித்தல்களையும் காட்சிப்படுத்துவதற்காக தங்களுக்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களுக்கான உரிமப்பத்திரங்களை நியமத்துணைவிதிகளில் கூறப்பட்ட நிபந்தனைகளை அமைவாக வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட விளம்பரப்பலகையில் காலத்திற்கு காலம் விளம்பரங்கள் மாற்றப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்ற போது அவ்விளம்பரங்கள் தொடர்பில் உரிய முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விளம்பர மாதிரி அமைவிட மாதிரி பெறப்பட்டு உறுதிப்படுத்தி அவற்கான உரிமம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் சபையால் வழங்கப்பட்ட உரிமப்பத்திரமின்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ள சகல விளம்பர அறிவித்தல்களையும், உரிமம் வழங்கப்பட்ட காலம் முடிவடைந்த விளம்பரங்களையும் மேற்படி நியமத்துணைவிதிகளுக்கு அமைவாக 30.09.2026 ஆம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கையிடுமாறும் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

