வறட்சியான வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக் குளத்தின் நீரின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதால், அப்பகுதியில் நீர் விநியோகத்தை ஒரு நாளைக்கு 4 மணித்தியாலங்களுக்குக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், தினசரி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக அதன் தலைவர் ஏ.எம்.பி.சி.டி.பண்டார தெரிவித்தார்.
இருப்பினும், நாடு முழுவதும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழமை போல் இயங்கி வருவதாகத் தலைவர் குறிப்பிட்டார்.
அந்த நிலையங்களில் அதிகபட்ச கொள்ளளவில் நீர் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 28 லட்சம் கன மீற்றர் நீர் உற்பத்தி செய்யப்படுவதுடன், அதில் 23 முதல் 24 சதவீதமான நீர் பாரிய நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்படுவதாகத் தலைவர் தெரிவித்தார்.
மேலும் 65 சதவீதமான நீர் ஆறுகள் மற்றும் ஓடைகள் போன்ற நீர் ஆதாரங்களிலிருந்து பெறப்படுவதாகவும், அதில் சுமார் 6 லட்சம் கன மீற்றர் நீர் களனி கங்கையிலிருந்து பெறப்படுவதாகவும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் பெறப்படும் நீரில் சுமார் மூன்றில் ஒரு பங்கு களனி கங்கையிலிருந்தே பெறப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, வறட்சியான வானிலையினால் மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மட்டுமே ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தலைவர் குறிப்பிட்டார்.
மொனராகலை மாவட்டத்தின் பிபிலை மற்றும் மெதகம ஆகிய பகுதிகளில் நீர் ஆதாரங்களில் நீர் பற்றாக்குறை நிலவுவதால், நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

