தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக ராமநாதபுரம் க்யூ பிரிவு ஆய்வாளர் ஜீவமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், க்யூ பிரிவு பொலிஸார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அரியமான் கடற்கரைக்கு அருகே இருந்த தோப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் அட்டைப்பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கவனித்தனர்.
அந்தப் பெட்டிகளை எடுத்து சோதித்தபோது, அவற்றில் இலங்கைக்கு கடத்துவதற்காக 8 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளைப் பறிமுதல் செய்த க்யூ பிரிவு பொலிஸார், அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக அவற்றை இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், அந்தத் தோப்பின் உரிமையாளர் யார் என்பது குறித்தும், இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையோரம் ஏதேனும் நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் க்யூ பிரிவு பொலிஸாரும் சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

