முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘சிரிலியா’ வங்கிக் கணக்கில், அவரது பெயருக்கு போலியான தேசிய அடையாள அட்டை இலக்கம் பயன்படுத்தப்பட்டிருந்த விடயம் மீண்டும் விசாரணையை மையப்படுத்தியுள்ளது.
குறித்த வங்கிக் கணக்கில் ஷிரந்தி ராஜபக்ஷவின் தேசிய அடையாள அட்டை இலக்கமாக ‘222222222V’ என்ற இலக்கம் குறிப்பிடப்பட்ட விடயம் முன்னதாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
இந்நிலையில் தற்போதைய விசாரணையில் குறித்த விடயம் மீண்டும் கவணம் பெற்றுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நிதிப் பரிவர்த்தனை
சுடுவெல்ல பகுதியில் உள்ள அரச வங்கிக் கிளையொன்றில், ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட மூவரின் பெயர்களில் கூட்டுக் கணக்காக ‘சிரிலியா’ கணக்கு திறக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் தொடர்பான தகவல்கள் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் முக்கிய கவனம் பெற்றுள்ளன.
அத்துடன், குறித்த வங்கிக் கணக்கின் ஊடாக பல சந்தேகத்திற்கிடமான நிதிப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மகரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேன் கருவியொன்றை கொள்வனவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ச நிதி திரட்டும் பிரசாரமொன்றை முன்னெடுத்திருந்ததாகவும், இதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய் பெறப்பட்டு ‘சிரிலியா’ கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதே காலப்பகுதியில் சீனாவிலிருந்து சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான PET ஸ்கேன் கருவியொன்று இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

