யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நாடுவதற்கு ஆதரவளிப்பதில் தமிழகத்திற்கு ஒரு கடமை இருப்பதாக குறிப்பிட்ட தமிழக முதலமைச்சர் விஜய், பொறுப்புக்கூறல் விடயத்தில் அடுத்த கட்டமாக எவ்வாறு செயற்படலாம் என்பது பற்றி துரிதமாக ஆராய்வதாக தமிழ் தேசிய பேரவையினரிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையின் 7 பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் (03) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜயை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த விடயத்தினை வெளிப்படுத்தினார்.
கடற்றொழிலாளர் விவகாரம்
அத்துடன் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அதனை முன்னிறுத்திய சர்வ கட்சி மாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமது நிர்வாகக் கட்டமைப்பின் கீழுள்ள வெளிநாட்டு விவகாரங்கள் பற்றி ஆராயும் குழுவுடன் கலந்துரையாடி அதன்பின்னர் தமது தீர்மானத்தை அறியத்தருவதாகவும் தமிழக முதலமைச்சர் கூறினார்.
மேலும், இலங்கை – தமிழக கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு முன்னுரிமை அளித்து ஒரே முறையில் கையாள்வதாகவும் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழகத்திலுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் தேவைப்பாடுகள் என்னவென்பதை அறிந்து அவற்றைப் பூர்த்தி செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகளிடம் தமிழக முதலமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

