கடந்த 2024ஆம் ஆண்டில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் நடத்தப்பட்ட ‘உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான சுகாதாரக் கணக்கெடுப்பில்’, 13-14 வயதுடைய சிறுவர்களில் 12% சதவீதமானோர் அதிக எடையுடனும், 3% சதவீதமானோர் உடல் பருமனுடனும் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் விசேட வைத்திய நிபுணர் மோனிகா விஜேரத்ன தெரிவித்துள்ளார்
இந்தக் கணக்கெடுப்பின் போது உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பாடசாலை மாணவர்களில் 17.4% சதவீதமானோர் தினசரி கார்போஹைட்ரேட் கலந்த மென்பானங்களை குடிப்பதற்குப் பழகியுள்ளனர் என்பதும் இங்கு தெரியவந்துள்ளது.
அத்துடன், 28.5% சதவீதமான சிறுவர்கள் அதிக உப்பு மற்றும் அதிக எண்ணெய் கொண்ட உணவுகளை உண்பதாகவும், மேலும் 41% சதவீதமான சிறுவர்கள் சர்க்கரை கலந்த உணவுகளை ஒரு தடவை அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் உட்கொள்வதாகவும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலைக்குத் தீர்வாக சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து இதற்கு முன்னர் ‘ஆரோக்கியமான சிற்றுண்டிச்சாலை வழிகாட்டி’ ஒன்றை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் தேசிய ஊட்டச்சத்து தினக் கொண்டாட்டத் திட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு மருத்துவ பீட மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன், அங்கு ‘ஆரோக்கியமான பாடசாலை சிற்றுண்டிச்சாலை வழிகாட்டிகள்’ வெளியிடப்படவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
இந்த வழிகாட்டல்களின் கீழ், கடந்த பெப்ரவரி மாதம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரினால் பாடசாலைகளில் ஆரோக்கியமான சிற்றுண்டிச்சாலைகளை நடத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறிய வைத்திய நிபுணர், இதற்கமைய பாடசாலைச் சிறுவர்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்வது இனிவரும் காலங்களிலும் தடைசெய்யப்படும் என்றும் கூறினார்.
இதேவேளை, இம்முறை தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் கருப்பொருள் “சிற்றுண்டிகள் குறித்து மீண்டும் சிந்திப்போம்” என்பதாகும். தற்காலத்தில் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளுக்குப் பதிலாக பதப்படுத்தப்பட்ட / அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இவ்வகை உணவுகள் அதிக சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் நிறைந்த, கலோரி அதிகமுள்ள, அதேநேரம் ஊட்டச்சத்து குறைந்த உணவுகளாகும். இத்தகைய சிற்றுண்டிகளை எங்கு வேண்டுமானாலும் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருத்தல், ஆக்ரோஷமான வர்த்தக விளம்பரங்கள் மற்றும் உண்பதற்கு இலகுவாக இருத்தல் போன்ற காரணங்களால், இவை தினசரி உணவுப் பழக்கவழக்கத்தின் பொதுவான அங்கமாக மாறியுள்ளதாக சுகாதார அமைச்சு இங்கு சுட்டிக்காட்டியுள்ளது.
முறையான உடல் நிறைச் சுட்டெண்ணைக் கொண்ட ஆரோக்கியமான முதியவர் ஒருவர் அடிக்கடி சிற்றுண்டிகளை உட்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும், அவ்வாறு உட்கொள்வது அதிக எடை, உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமையும் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், தேவையற்ற சிற்றுண்டிகளை உட்கொள்வதைக் குறைத்து, சமநிலையான ஊட்டச்சத்துள்ள பிரதான உணவுகளை உரிய நேரத்தில் உட்கொள்வதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்தி, உடலின் வளர்சிதை மாற்றச் செயற்பாடுகளை சீராகப் பேண முடியும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, 2026 தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் மூலம் அறிவியல் சான்றுகளின் அடிப்படையிலான மிதமான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சு, தேவையற்ற சிற்றுண்டிகளை உட்கொள்வதைக் குறைத்து, சிற்றுண்டிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் ஆரோக்கியமான, இயற்கையான மாற்றீடுகளைத் தேர்ந்தெடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

