நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக 384 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களில் 291 வௌிநாட்டவர்களும் 93 நேபாள மக்களும் அடங்குகின்றனர்.
திரிசூலி ஆறு திடீரென அதிக அளவிலான நீரினால் பெருக்கெடுத்து ஓடுவதை வௌியாகியுள்ள சில காணொளிகள் காட்டுகின்றன.
ஆற்றின் நீரின் அளவும் வேகமும் கணிசமாக அதிகரித்துள்ளதோடு, அது வண்டல் மண்ணினாலும் நிரம்பியுள்ளது போல் அந்த காணொளிகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகொப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேபாளத்துக்கு புனிதப் பயணம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் ரசுவா மாவட்டத்தின் திமுர் பகுதியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

