இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு ஊழல் குற்றச்சாட்டு வழக்குடன் தொடர்புடைய வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக, வரும் மே 23 ஆம் திகதி முதல் ஜூன் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்காக, தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குமாறு சந்தேக நபரான சாமர சம்பத் தசநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்தக் கோரிக்கையை பரிசீலித்த நீதவான், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சந்தேக நபருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு உத்தரவிட்டார்.
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு வழக்கு நேற்று (18) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதும், அந்த வழக்குடன் தொடர்புடைய வெளிநாட்டுப் பயணத்தடையைத் தற்காலிகமாக நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

