பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
2024 ஆம் ஆண்டில் குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தது.
இருப்பினும் இதுவரை அது வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்தார்.
இதற்கமைய இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.

