ஒரு இலட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பில், வவுனியா பொலிஸரருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, ஆறு பேர் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கொழும்பு, அவிசாவளை, குருநாகல், வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும், இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் பயன்படுத்திய மூன்று சொகுசு வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திய சிலர், தாம் மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக தெரிவித்ததுடன், அவரது வங்கிக் கணக்கில்இருந்து, பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் அமெரிக்க நாட்டிலிருந்து வைப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனை வெளியில் எடுப்பதற்கு உதவிசெய்யுமாறு தெரிவித்திருந்தனர், மேலும் அப்பணத்தில் 2,500 கோடி ரூபாயை குறித்த இளைஞருக்கு வழங்குவதாகவும் கூறியிருந்தனர்.
இதையடுத்து, அவர்களுக்கு உதவும் முகமாக, அந்த இளைஞரும் கடந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து அந்த குழுவினருடன் இணைந்து கொழும்பில் தங்கிருந்து வந்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் வைத்து அவரது வங்கி கணக்கில் ஒரு இலட்சம் கோடி மதிப்பிலான இலங்கை ரூபாய் வங்கி கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு இளைஞரிடம் தெரிவித்துள்ளது.
எனினும், அந்தப் பணத்தை எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் அவர் வவுனியாவுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், நேற்று (16), குறித்த இளைஞரை மீண்டும் தொடர்புகொண்ட அந்தக் குழுவினர், பணத்தை மீட்பதற்காக கொழும்பு செல்வதாகத் கூறி அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி கூட்டிச்சென்றுள்ளனர்.
இதையடுத்து, குறித்த இளைஞர் அவர்களுடன் வருவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், அவ்விளைஞனின் நண்பன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியதையடுத்து, இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபர்களை கைதுசெய்த்துடன், குறித்த இளைஞனிடம் வாக்குமூலத்தையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். அத்துடன், இது தொடர்பாக மத்திய வங்கிக்கும் தெரியப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரை கடத்ததிச் செல்லும் நோக்குடன் அந்தக் குழு வந்திருக்கலாம் என, பொலிஸாரால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.