தெற்காசியாவின் எதிர்கால பொருளாதார வெற்றியை அவ்வப்போது அதிகாரத்தை வைத்திருக்கும் ஆளும் அரசாங்கங்களால் மாத்திரம் முன்னெடுக்கவோ அல்லது தீர்மானிக்கவோ முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிராந்தியம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் தொழில்முனைவோரும், வணிக சமூகமும், உற்பத்தியாளர்களும், விநியோகஸ்தர்களும் மற்றும் முதலீட்டாளர்களுமே இதனைத் தீர்மானிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Vestige Investor and Dealer மாநாடு கொழும்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நீண்டகால கலாச்சார, ஆன்மீக மற்றும் பொருளாதார உறவுகளை அவர், இங்கு முன்னிலைப்படுத்தி, UPI ஒருங்கிணைப்பு மற்றும் உத்தேசிக்கப்பட்ட வலுச்சக்தி இணைப்பு திட்டங்கள் போன்ற முயற்சிகள் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன் அபிவிருத்திக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை சந்தித்த அண்மைக்கால பொருளாதார நெருக்கடியில் நாடொன்றாக பெற்ற அனுபவங்களை முன்னிலைப்படுத்தி, சுதந்திர சந்தைகளின் வினைத்திறனோடு, சமூக நீதி, அரச பங்கு, வெளிப்படைத்தன்மை மற்றும் சம வாய்ப்புகளை இணைக்கும் சமூக சந்தைப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது முக்கியமாகும்.
அனைவரும் பகிர்ந்துகொள்ளும் பொருளாதார வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியொன்றையே நாம் எதிர்பார்க்கிறோம்.
பொருளாதார முன்னேற்றத்தின் பலன்களை சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

